எடப்பாடி அரசு செப்.30- க்குள் கவிழ்ந்துவிடும்... மீண்டும் தேர்தல் வரும்: விஜயகாந்த் ஆரூடம்
எடப்பாடி தலைமையிலான அரசு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கவிழ்ந்துவிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அரசு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கவிழ்ந்துவிடும்; மீண்டும் சட்டசபை தேர்தல் வரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் அதன் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆட்சி கவிழ்ந்திருக்கும்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் சரியாக காய்நகர்த்தியிருப்பார். இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
நான் இல்லைன்னாதான் வெற்றிடம்
சசிகலா மீது எனக்கு சாப்ட் கார்னர் இல்லை. தமிழக அரசியலில் விஜயகாந்தை இல்லாமல் ஆக்கினால்தான் வெற்றிடம் என்பது ஏற்படும்.
தனித்தே போட்டி
ரஜினிகாந்த், அன்புமணி, கமல்ஹாசன், பாஜக எல்லோரும் வெற்றிடத்தைப் பிடிப்போம் என கூறிவருவது என்னுடைய இடத்தைத்தான் என்பதுதான் உண்மை... உண்மை. சட்டசபையில் மீண்டும் தனித்துதான் போட்டியிடுவோம்.
ஏதோ ஒருநம்பிக்கை...
சட்டசபை தேர்தலில் ஏதோ ஒரு நம்பிக்கையில் தனித்து போட்டியிடுகிறோம். வைகோ, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி சேரமாட்டேன்; சேரமாட்டேன்; சேரமாட்டேன்.