தினகரனை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் - தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி தரப்பு அட்வைஸ்
தினகரனை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் என 18 எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி தரப்பு அறிவுரை வழங்கியிருக்கிறது.
Recommended Video
சென்னை: தமது ஆட்சி நிச்சயம் கவிழாது... தினகரனை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் என 18 எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி தரப்பு அறிவுரை வழங்கியிருக்கிறது.
'இந்த ஆட்சி ஒரு வாரத்தில் கவிழும். அதன்பிறகு ஆளுநர் ஆட்சி ஆறு மாதம்' என ஈரோடு மண்டல மாநாட்டில் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள், ஆளும்கட்சி வட்டாரத்தில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ' மூன்று மாதத்தில் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் சொன்னார். மூன்று மாதத்தில் கவிழ்ந்துவிட்டதா? நானும் இருக்கிறேன் எனக் காட்டிக் கொள்ள அவர் விளம்பரப்படுத்துகிறார்' என விவாதித்துள்ளனர் முதல்வர் தரப்பினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கு. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார் தினகரன்.
திமுகவுடன் சேருவது இல்லை
ஸ்டாலினும் இந்த வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். ஆனால், ' தி.மு.கவை நோக்கி தினகரன் வந்தால் ஆட்சிக் கவிழ்ப்பு எளிதாகிவிடும்' என சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத தினகரன் தரப்பினர், ' ஸ்டாலினை நோக்கி நாம் சென்றால், எடப்பாடி தரப்பு வலிமையுடையதாகிவிடும். ' காலம் முழுக்க ஜெயலலிதா எதிர்த்த தி.மு.கவுடன் சேர்ந்து தினகரன் துரோகம் செய்துவிட்டார்' எனப் பிரசாரம் செய்வதற்கும் வாய்ப்பாகப் போய்விடும்' என நினைக்கின்றனர்.
தினகரனிடம் இருந்து எஸ்கேப்
இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரம், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அதிகாரம் வலுவாக உள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு எதுவும் செய்யப் போவதில்லை. தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏக்களில் 15 பேர் முதல்வரின் நேரடித் தொடர்பில் வந்துவிட்டனர்.
புலம்பும் தினகரன் முகாம்
முதல்வர் தரப்பில் பேசிய தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் சிலர், ' எங்களை தினகரன் அநியாயமாக சிக்க வைத்துவிட்டார். எப்போது தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. எம்.எல்.ஏ பதவிக்கு உண்டான எந்தப் பலன்களையும் அனுபவிக்க முடியவில்லை' எனக் கூற, இதற்குப் பதில் கொடுத்த முதல்வர் தரப்பினர், ' மூன்று இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள், தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால் மட்டுமே, கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். அதன்பிறகு உங்கள் முடிவைச் சொல்லுங்கள். ஒருவேளை உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அரசை நீங்கள் ஆதரித்துத்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், மீண்டும் தகுதி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும். தினகரனை நம்பி மீண்டும் மீண்டும் மீண்டும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக அரசுக்கு காங்., திமுக ஆதரவு?
மேலும் 133 பேரில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது தினகரனுக்கு நிச்சயமாக இல்லை. 18 பேரை வைத்துக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றத்தின் மூலம் தகுதிநீக்கத்துக்கு ஆளானாலும் உங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முதல்வர் தயாராக இருக்கிறார். தினகரனைத் தவிர, அனைவரையும் எடப்பாடி பக்கம் வர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமும். காங்கிரஸ் தரப்பில் வசந்தகுமார், கே.ஆர்.ராமசாமி தவிர மற்றவர்களும் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலரும் தொடர்பில் உள்ளனர். முழுமையான பதவிக் காலத்தை இந்த ஆட்சி நிறைவு செய்யும்' எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாம்.