எடப்பாடிக்கே இரட்டை இலை! டெல்லியின் பைனல் மூவ்
சென்னை: இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை இன்னமும் முடியவில்லை. ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பருக்குள் வர இருப்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே அளிக்க வேண்டும் என பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் தினகரன் தரப்பு கொதிப்பில் இருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை நடந்து வருகிறது. இதில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் ஆஜராகி வருகிறார்.
ஆவணங்களில் குளறுபடி
விசாரணையின்போது, ' எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் செப்டம்பர் 29-ம் தேதிக்கு முன்பாகத் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். சின்னம் தொடர்பாக எதிர்த்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளன. அவற்றையெல்லாம் நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தயார். நிர்வாகிகளைக் கட்டாயப்படுத்தி, கையெழுத்திடச் செய்துள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சோதித்துப் பார்க்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என தினகரன் தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
தினகரன் தரப்பு கோரிக்கை
இதற்குப் பதில் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ' பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்த யாரையும் நாங்கள் நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக உங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல்செய்ய வேண்டும்' எனக் கூறி தினகரன் தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். தொடர்ந்து, ' வரும் 23-ம் தேதி, மூன்றாம் கட்ட விசாரணை நடைபெறும்' என அறிவித்துள்ளனர்.
மோடி சப்போர்ட்
இந்நிலையில், பெரியகுளத்தில் நடந்த அ.தி.மு.க 46-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ' பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். 98 சதவீத கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலம் எங்களிடம் உள்ளது. எனவே எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி பெறுவோம்' எனப் பேசியது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.
சின்னம் முக்கியம்
" எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலை வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. அவர் பாடுபட்டு வளர்த்த சின்னம் முடங்கிக் கிடப்பதை கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் முப்பது லட்சமாக இருந்த தொண்டர்களின் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்திக் காட்டினார் ஜெயலலிதா. தற்போது நடக்கும் உள்கட்சி குழப்பத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கிக் கிடக்கிறது. யார் கையில் சின்னம் கிடைக்கிறதோ, அவர்களே வலுப்பெறுவார்கள் என்பதால் தினகரன் தரப்பு முட்டுக்கட்டை போடுகிறது. இதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி கைக்கு சின்னம் வந்து சேரும்" என்கின்றனர் கொங்கு வட்டாரத்தில்.
எடப்பாடி தரப்புக்கு சின்னம்
பா.ஜ.க முன்னணி தலைவர் ஒருவரிடம் பேசினோம். " சின்னத்தை யார் கைகளில் ஒப்படைப்பது என்பதில் பா.ஜ.கவுக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. டெல்லி தலைவர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ' சின்னத்தை முடக்கி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வத்திடம் சின்னத்தை ஒப்படைப்பதே நல்லது. அப்படி கொடுக்காவிட்டால், சசிகலா தரப்பு வலுப்பெறும். அவர்கள் வலுவடைந்தால் தி.மு.க, காங்கிரஸ் தரப்பிடம்தான் சரண்டர் ஆவார்கள். தற்போதுள்ள சூழலில், இ.பி.எஸ்-ஓ.பிஎஸ் அணி, மத்திய அரசுடன் சுமூக உறவில் இருக்கிறது. நமக்கு எதிராக அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஒருபோதும் நம்மிடம் வந்து சேரப் போவதில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதே நல்லது. அதனைத் தொடர்ந்து வரும் தேர்தல்களில் நம்முடன் இணக்கமாக இருப்பதையே எடப்பாடி விரும்புவார். தினகரன் தரப்பை வளர்த்துவிடுவது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்' எனப் பேசியிருக்கிறார்.
சு. சுவாமி ஆதரவு
இந்த விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமியின் நிலைதான் வேறாக இருக்கிறது. ' எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிட்டால், அவர் இன்னொரு ஜெயலலிதாவாக மாறிவிடுவார். அதனால் என்ன பயன் இருக்கப் போகிறது?' என விளக்கியிருக்கிறார் சுவாமி. ஆனாலும், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கே இரட்டை இலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்றார் விரிவாக.