ஆடிட்டரிடம் சரணடைந்த 'மணி அமைச்சர்கள்'-எடப்பாடி அணியின் திடீர் தினகரன் எதிர்ப்பின் பின்னணி இதுதான்!
தினகரனை எடப்பாடி கோஷ்டி தில்லாக எதிர்ப்பதன் பின்னணியில் ஆடிட்டருடான சந்திப்புதான் காரணம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
சென்னை: டெல்லியின் மிக முக்கிய ஆலோசகரான தமிழக ஆடிட்டரை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்கள் 'நிழல்' முதல்வராக இருக்கும் கொங்கு மண்டல மணியான அமைச்சர்கள். இச்சந்திப்பைத் தொடர்ந்துதான் தினகரனை பகிரங்கமாக எதிர்க்க தொடங்கியதாம் எடப்பாடி கோஷ்டி.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சசிகலா குடும்ப பிடிக்குள் போய்விடக் கூடாது என்பதில் வெளிப்படையாக பேசிவந்தவர் ஆடிட்டர். அவரது ஆலோசனையை டெல்லியும் பவ்யமாக ஏற்று வந்தது.
இன்னும் சொல்லப் போனால் தமிழக ஆளுநர், பாஜகவைவிட டெல்லியின் பிரதிநிதியாக இருப்பவரே அந்த ஆடிட்டர்தான்.. அவர் சொல்லுவதை ஏன் என்று கேட்காமல் நடைமுறைப்படுத்துவதுதான் டெல்லியின் வேலை.
இவ்வளவு சக்திவாய்ந்த ஆடிட்டரை தமிழக ஆளும் கட்சி கோஷ்டிகள் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. இவரை பிடித்தால் எல்லாமே சரியாகிவிடும் என்பதுதான் ஆளும் கட்சி கோஷ்டிகளின் மனநிலை.
இந்நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என பேசப்பட்ட போது திடீரென கொங்கு மண்டல மணி அமைச்சர்கள், ஆடிட்டரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தினகரன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இச்சந்திப்புகளில் ஆடிட்டர் கொடுத்த தைரியத்தில்தான் தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைப்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்ததாம் எடப்பாடி கோஷ்டி.