நீட்டுக்கு எதிராக நிமிர்ந்து நின்றிருக்க வேண்டாமா.. ஜெ. இல்லாத வெறுமையை உணர வைத்த ஆட்சி!
மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் தலையாட்டி பொம்மை போல் தலையை ஆட்டிக் கொள்ளும் மாநில அரசு இனியாவது மக்கள் நலன்களில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தங்களது சுயநலன்களுக்காகவும், அதிகார போட்டிக்காகவும் மத்திய அரசின் பேச்சை கேட்காமல் மாநில அரசு இனியாவது எழுந்திருக்குமா? என்று மக்கள் கேள்வி எழுப்பியபடி உள்ளனர்.
ஜெயலலிதா இருந்தவரை ஏழை மாணவர்களின் கனவுக்கு சாவுமணி அடிக்கும் நீட் தேர்வை அனுமதிக்கவே இல்லை. தொடர்ந்து அவர் விலக்கு கோரி போராடி அதில் வெற்றியும் பெற்றார்.
ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகாமல் போய்விடும் என்று அவர் இந்த தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் இருந்து வந்தார்.
ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக இரு அணிகளாகவும் உடைந்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. அதுநாள் முதல் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிமுகவை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
அதிமுக இணைப்பு
பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. மேலும் ஆட்சிக்கு பெரும்பான்மை இழக்கும் மாநிலங்களில் ஆதரவு தெரிவித்து மறைமுகமாக பாஜக ஆட்சி செய்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா இருந்த போது எந்தெந்த திட்டங்களை வரக் கூடாது என்று அவர் தடுத்தாரோ அவற்றையெல்லாம் சிபிஐ ரெய்டு, ஆட்சி கவிழ்ப்பு போன்ற மிரட்டல்களால் தமிழகத்தில் கொண்டு வந்தனர்.
மக்கள் விரோத திட்டங்கள்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யாதது, நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது. இதற்கு அழுத்தமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்டது எடப்பாடி அரசு என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் மோடி ஆட்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதில் வலுக்கட்டாயமாக கொண்டுவரப்பட்ட, நீட் தேர்வுதான் மாணவர்களை மிகவும் பாதித்தது.
நீட் தேர்வு வராது
நீட் தேர்வை கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போது மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், மனு கொடுத்துள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கூறிய நிலையில் நீட் தேர்வும் வந்தது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடாதவாறு நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. எனினும் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
அனிதா மரணம்
அரியலூர் மாணவி அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். அவரது கட் ஆப் மதிப்பெண்கள் 196 ஆகும். ஆனால் நீட் தேர்வில் அவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தயார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனால் தமது கனவு நிறைவேறும் என்று எண்ணியிருந்த நிலையில் நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கூறி பல்டி அடித்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டிய ஏழை மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
ஜெ. கம்பீரம் எங்கே?
தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ள அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து மத்திய அரசின் சொல் கேட்டு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. ஜெயலலிதா போல் கம்பீரமாக இருந்திருந்தால் நீட் தேர்வை தமிழகத்துக்குள் கொண்டுவராமல் இருந்து அனிதாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். நாம் உண்ணும் உணவு முதல் படிக்கும் கல்வி வரை எதை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதற்கு மத்திய அரசுக்கு உரிமையுள்ளதா? என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோர் கேள்வியாக உள்ளது.
இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்
மாறி மாறி கோரிக்கை மனுவை கொடுத்ததற்கு பதில் சாலையில் இறங்கி அதிமுக அரசு போராடியிருந்திருக்கலாம். மேலும் நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் ஆதரவு தெரிவிப்போம் என்று அதிமுக அரசு கூறியிருந்திருக்கலாம். இவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை ஜெயலலிதா பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால் அவரைபோல உறுதியாக இருந்திருந்தால் அனிதா உயிரை மாய்த்திருப்பாரா? இனியும் இதுபோன்று அனிதாக்கள் பலியாகாமல் இருக்க எடப்பாடி அரசு எழுந்து நிமிர்ந்து நிற்க வேண்டும்.