தினகரனுக்கு 'அந்த' தைரியம் இருக்கிறதா?! - வரிந்து கட்டும் எடப்பாடி அணி
சென்னை: ஆட்சியையும் கட்சியையும் எடப்பாடி பழனிசாமியே வழிநடத்தி வருகிறார்' என நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை கூறிய வார்த்தைகள் தினகரன் கூடாரத்தை கதிகலக்கிவிட்டது. ' கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என எடப்பாடி கருதுகிறார். ' கட்சி அலுவலகத்துக்குள் வருவேன்' என மீடியாக்களிடம் மட்டும் பூச்சாண்டி காட்டுகிறார் தினகரன்' என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று கட்சி அலுவலகத்தில் நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்துக்கு தினகரன் ஆதரவு அமைச்சர்களும் ஆஜர் ஆனார்கள். கூட்டத்துக்குப் பின் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ' அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் விரைவில் இணையும்' எனக் கூறினார்.
அவருக்கு அடுத்ததாகப் பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், ' எடப்பாடியே கட்சியையும் வழிநடத்துகிறார்' என அதிர வைத்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர், " மீண்டும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின்கீழ் செல்வதற்கு பெரும்பாலான அமைச்சர்களுக்கு விருப்பமில்லை. கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் விரும்பும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் எல்லாம் பல கோடி ரூபாய்களுக்கு வேலை நடக்கிறது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால், 'வரவு நின்று போய்விடும்' என எம்.எல்.ஏக்கள் நினைக்கின்றனர்.
தினகரனுக்குத் தெரியும்
எனவேதான், தினகரனின் நடவடிக்கைகளுக்கு அவர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மன்னார்குடியில் நடந்த சந்தான லட்சுமியின் துக்க நிகழ்விலும் ஒன்பது எம்.எல்.ஏக்கள் மட்டுமே தென்பட்டனர். 'கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு பெரிய ஆதரவு இல்லை' என்பதை தினகரன் உணர்ந்து வைத்திருக்கிறார். எதையாவது செய்து கட்சி அலுவலகத்துக்குள் வர நினைக்கிறார்.
உள்ளே விடும் எண்ணம் இல்லை
அவரை உள்ளே விடும் மனநிலையில் கட்சி நிர்வாகிகள் இல்லை. இதேதான் நேற்றைய கூட்டத்திலும் வெளிப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மிகுந்த சோர்வுடன் தென்பட்டார் எடப்பாடியார். மன்னார்குடி ஆதரவு நிர்வாகிகள் மத்தியில் எந்தவித கலக்கமும் தென்படவில்லை. குறிப்பாக, உற்சாகமான மனநிலையில் கூட்டத்தில் பங்கேற்றார் ராஜ்ய சபா எம்.பி வைத்திலிங்கம். இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்துவது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் வேகம் பெறும்" என விவரித்தவர்,
கொங்கு பிளான்
"தொடக்கத்தில், எடப்பாடி பழனிசாமியே கட்சியை வழிநடத்துவது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் முரண்பட்டனர். அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து கொங்கு தரப்பு விவரித்ததும், எடப்பாடியை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர். அமைச்சர்களின் ஏகோபித்த முடிவால் கொந்தளிப்பில் இருக்கிறார் தினகரன்.
அவர் சொல்லட்டுமே
'கட்சி அலுவலகத்துக்குள் தினகரன் செல்வார்' என அவரது ஆதரவாளர்கள்தான் பேசி வருகின்றனர். 'எந்த இடத்திலும் நான் போகப் போகிறேன்' என அவர் சொல்லவில்லை. அதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. சில மீடியாக்களை வைத்துக் கொண்டு அவர் செயல்படுவதாக எடப்பாடி தரப்பினர் நினைக்கின்றனர்.
வர முடியுமா
இதைப் பற்றி கொங்கு நிர்வாகிகள் பேசும்போது, 'கட்சி அலுவலகத்துக்குள் வருவது இருக்கட்டும். முதலில் சசிகலா படத்தை தலைமை அலுவலகத்துக்குள் கொண்டு வந்து வைக்கும் தைரியம் தினகரனுக்கு இருக்கிறதா? பொதுச் செயலாளர் சசிகலாவையே ஓரம்கட்டித்தான் வைத்திருக்கிறார் எடப்பாடியார்.
சசிகலாவுக்கே இங்கு இடமில்லை
கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக இருந்தும், அவரது சிறு படம்கூட தலைமை அலுவலகத்தில் இல்லை. இதில் இருந்தே சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மீண்டும் கட்சிக்குள் வருவதற்காக பலகட்ட தில்லுமுல்லுகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் நிர்வாகிகள் துணையோடு எடப்பாடி முறியடிப்பார். சசிகலா குடும்பத்துக்கு எதிராக அவர் நேரடியாக களமிறங்கும் சூழல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன" என்றார் விரிவாக.