மணல் விற்பனை பற்றி கேட்ட நிருபர்.. பிரஸ் மீட்டை உடனே முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி
மணல் விற்பனையை அரசே நடத்துமா என்ற கேள்வி நிருபரால் முன் வைக்கப்பட்டதும், வணக்கம் என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார் முதல்வர்.
சென்னை: முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்து முக்கியமான 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதன்பிறகு நிருபர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிருபர்கள் கேள்விகள் பலவற்றுக்கும் நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறினார் முதல்வர்.
மாநிலம் முழுக்க வறட்சி நிலவுகிறதே, அதை சமாளிக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இயற்கையை வெல்ல முடியாது
அந்த கேள்விக்கு, "நீங்களே பஞ்சம் இருப்பதாக கூறிவிட்டீர்கள். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு, திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் முதல்வர்.
திட்டம் உள்ளதாம்
அந்த விரிவான திட்டம் எது, நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறுகிறார்களே அது எங்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை கூறாமல் திட்டம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு பதில் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
மணல் விற்பனை
மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்வி முக்கியமானது. மணல் விற்பனையை அரசே நேரடியாக செய்யுமா என்று அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது, போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான சேகர் ரெட்டி அரசின் மணல் அள்ளும் பணிகள் பலவற்றை கான்டிராக்ட் எடுத்து மேற்கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்தியின் பிசினஸ் பார்ட்னரும் ஆவார்.
பிரஸ் மீட் முடிந்தது
இந்நிலையில்தான், மணல் விற்பனையை அரசே நடத்துமா என்ற கேள்வி நிருபரால் முன் வைக்கப்பட்டது. இக்கேள்வியை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்வது என்று யோசித்தார். பிறகு, கேள்வியையே கவனிக்காதவர் போல "இப்போது அறிக்கையாக எல்லோருக்கும் கொடுக்கிறோம். நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு விளக்கம் அறிக்கையில் உள்ளது. வந்துள்ள அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வணக்கம்" என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். பத்திரிகையாளர்கள் "சார்.. சார்" என பல முறை கூப்பிட்டும் அதன்பிறகு பேட்டியை அவர் தொடரவில்லை.