ஓ.பி.எஸ் கோஷ்டியின் 2 நிபந்தனைகளையும் தட்டிக் கழித்த எடப்பாடி கோஷ்டி! நிபந்தனைகளுக்கு பதில் இதுதான்
ஓ.பன்னீர்செல்வம் அணியின் இரு கோரிக்கைகளையும், எடப்பாடி அணி தட்டிக்கழித்துவிட்டது. எனவே இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு பேச்சுவார்த்தை நடத்த 2 நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் அணி விதித்திருந்தது. இரு நிபந்தனைகளையும் ஏற்காமல் ஜகா வாங்கிவிட்டது எடப்பாடி அணி.
சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மறைவு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்விரண்டையும் செய்தால்தான் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று, ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆலோசனை
இதனிடையே, எடப்பாடியார் அணியை சேர்ந்த மூத்த அமைச்சர்கள், இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி: ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
நிபந்தனை இல்லை
எடப்பாடி அணி தரப்பில் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் போன்றோர் பேசும்போது சில வார்த்தை தவறாக வந்திருக்கலாம். அதை பொருட்படுத்த வேண்டாம்.
தேர்தல் ஆணையம்
4 ஆண்டுகாலம் ஆட்சி நீடிக்க, இரட்டை இலையை மீட்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவி விவகாரம் நிலுவையில் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தில் அது பைசல் செய்யப்பட்ட பின்னர் அதுபற்றி பேசலாம்.
நீதிமன்றத்தில் நிலுவை
அதேபோன்று, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. உயர்நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் அதை செயல்படுத்த அரசு தயார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. மேலும், ஜெயலலிதா மறைந்தபோது, பன்னீர்செல்வம்தான் முதல்வர் பொறுப்புகளை கவனித்து வந்தார். இவ்வாறு, வைத்திலிங்கம் தெரிவித்தார்.
கல்தா
எனவே, ஓ.பன்னீர்செல்வம் அணியின் இரு கோரிக்கைகளையும், எடப்பாடி அணி தட்டிக்கழித்துவிட்டது. எனவே இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.