அமைச்சர்களுடன் ஹாயாக டீ சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி.. புதுக்கோட்டை சுவாரஸ்யம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலையோர கடையில் டீ குடித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். இதனிடையே திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கலந்துகொண்ட விழா என்பதால் சலசலப்பு இல்லாமல் நடத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக கவனமாக கையாண்டனர். இந்நிலையில் விழாவை முடித்துவிட்டு திரும்பும் வழியில் கீரனூரில் சாலையோரம் உள்ள ஒரு டீக்கடைக்கு திடீரென விசிட் அடித்தார் முதல்வர்.
பின்னர் ஸ்டாலின், ஓபிஎஸ் பாணியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் புடை சூழ டீ சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த டீ கடையில் சுவாரஸ்யம் என்னவென்றால் டீ சுவையாக இருந்தால் வாடிக்கையாளர்கள் கடை முன்பு உள்ள மணியை அடித்துச் செல்வது வழக்கமாம்.
ஒரு பக்கம் தினகரன் அணி, மற்றொரு புறம் ஓபிஎஸ் அணி என பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஹாயாக அமர்ந்து டீ சாப்பிட்ட புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.