பெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என 'நா' கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி!
திருப்பூரில் பெண்ணை தாக்கிய அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திருப்பூரில் பெண்ணை தாக்கிய அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் கூட முதல்வருக்கு தெரியவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுபியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி காலை முதலே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அன்று மாலை 5 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி
மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை ரோட்டில் வைத்து கையால் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
இதில் அந்தப் பெண்ணின் கேட்கம் திறன் பாதிக்கப்பட்டது. போலீசாரின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஏடிஎஸ்பிக்கு எதிராக போராட்டம்
பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஏடிஎஸ்பி பாண்டியராஜனைக் கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இதுதொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அண்மையில் பதவி உயர்வு
ஆனால் ஏடிஎஸ்பி பாண்டியன் மீது பெயர் அளவுக்கு கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கடந்த மாதம் அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கியது.
நா கூசாமல் பொய்
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு, பெண்ணை அறைந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நா கூசாமல் பொய் கூறியுள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு முதல்வரே சப்பைக்கட்டு கட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.