கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: உடனே நிறுத்த வேண்டும்.. ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் 28 லட்சம் ரூபாய் செலவில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.
சித்தூர் சீதலகுப்பத்தில் தடுப்பணைக்கான கட்டுமான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளுக்காக மணல், ஜல்லி கற்கள் போன்றவற்றையும் அம்மாநில அரசு கொட்டி வைத்துள்ளது.
தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
அணைகளுக்கான அடித்தளம் போடப்பட்ட நிலையில் ஆந்திர அரசு தடுப்பணைக் கட்ட தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திரா அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் வரத்து பாதிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆந்திர முதல்வருக்கு கடிதம்
இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தடுப்பணைக் கட்டும் பணியை உடனடியாக கைவிடக்கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்துடன் ஆலோசிக்கவில்லை
தடுப்பணை கட்டும் பணியை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அணைக்கட்டுவது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்
தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்தபின் அணைக்கட்டும் பணியை ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.