பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதோடு காத்திருக்கிறோம் - எடப்பாடி பழனிச்சாமி
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. குடிநீர் பிரச்சினை தீர்க்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியிலும் தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக நினைத்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே அதிமுக அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர். காவிரி விவகாரத்தில் விரைவில் சாதகமான தீர்ப்பை பெறுவோம். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது என்றார்.