எண்ணெய் கசிவு பாதிப்பு.. மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம்... ரூ.15 கோடி ஒதுக்கீடு
எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை: கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா 5000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் மீனவர்கள் பெருமளவில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர்.
எனவே, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கப்பல் விபத்து
கடந்த 28.1.2017 அன்று எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் டான் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதால், கப்பலிலிருந்த எண்ணெய் கசிந்து திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் பரவியது.
போர்கால நடவடிக்கை
இவ்வாறு கரை ஒதுங்கிய எண்ணெய் படலத்தை உடனடியாக அகற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றைச் சார்ந்த பணியாளர்களுடன் மீனவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆக மொத்தம் 5,700 நபர்கள் போர்க்கால அடிப்படையில் இந்தப் பணியில் 25 நாட்களுக்குமேல் ஈடுபட்டு கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றினர்.
மீனவர்கள் பாதிப்பு
மேற்படி எண்ணெய் கசிவின் காரணமாக இம்மூன்று மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் 28.01.2017 முதல் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல இயலாததாலும், மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை பொதுமக்கள் வாங்க தயங்கியதாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியது.
கள ஆய்வு
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீன் மாதிரிகளை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் உடனுக்குடன் ஆய்வு செய்து மீன்கள் பொதுமக்கள் நுகர்வதற்கு தகுதியானதென சான்று அளித்தது. இந்த விவரங்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. மீனவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகளை கள ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசின் மூலமாக பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
காலதாமதம்
அதன்படி, கப்பல் நிறுவனங்களின் காப்பீட்டு நிறுவனத்தின் கேட்புப் படிவங்கள் மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீளப் பெறும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இத்தகைய படிவங்களை பூர்த்தி செய்து காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு மூலம் நிவாரணம் பெறவேண்டியுள்ளது. பொதுவாக உலகளவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உரிய நிவாரணம் பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
குடும்பத்திற்கு ரூ5000
மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென்ற நோக்கில் 23.2.2017 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணெய் கசிவினால் பாதிப்பிற்குள்ளான 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
15 கோடி ஒதுக்கீடு
இடைக்கால நிவாரணத்திற்கான மொத்த செலவினமான 15 கோடி ரூபாயை முழுவதுமாக தமிழ்நாடு அரசு ஏற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், ரூ.75 லட்சம் செலவில் இரண்டு மீன் சந்தைகள் - எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு மூலம் தற்சமயம் செலவு மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.