ஸ்டாலின் டீ குடிச்சா நாங்களும் குடிப்போம்ல.. ஏட்டிக்குப் போட்டி எடப்பாடி!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சாலையோர கடையில் டீ குடிக்க ஆரம்பித்துள்ளார்.
சென்னை: புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சாலையோரம் உள்ள கடையில் எளிமையாக உட்காரந்து டீ குடிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார். அப்போது முதன் முறையாக சாலையோட கடைகளில் டீ குடித்துக்கொண்டே மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆனால் இது படப்பிடிப்புதான் என்றும் திமுகவின் கிரியேட்டிவ் டீம் இரு தினங்களுக்கு முன்பாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று டீ தூள், டம்ளர் முதற்கொண்டு அந்த டீ கடைக்காரருக்கு கொடுத்து செட்அப் செய்து விடுவார்கள் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலுக்காக மேடைகளில் பேசிவந்த மு.க.ஸ்டாலின் திடீரென "நமக்கு நாமே" பாணியில் டீ கடைக்கு சென்று அமர்ந்து ஹாயாக டீ சாப்பிட்டு வேட்பாளருடன் வாக்கு சேகரித்தது களைகட்டியது. அதேபோல் வீதிகளில் இறங்கி வாக்கு சேகரிக்க பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
இப்போது கூட ஏரிகள் தூர் வாரப்படுவதை பார்வையிட போகும் போது கட்சி நிர்வாகிகளுடன் சாதாரண கடையில் அமர்ந்து டீ குடித்து கலந்துரையாடி வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் ஸ்டாலினுக்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சாலையோர கடையில் டீ குடிக்க ஆரம்பித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது கீரனூரில் உள்ள சாலையோர டீ கடையில் அமைச்சர்களுடன் முதல்வர் டீ குடிக்கும் இந்த காட்சி நிகழ்ந்துள்ளது.
அவர்கள் டீ குடித்தையும் தாண்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் மிக மிக எளிமையான சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்கள் என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
மேலும் திடீரென எடப்பாடியார் இறங்கி வர காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.