எடப்பாடி அரசு கவிழும், ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர அனைவரும் அமமுகவில் சேர்வார்கள்.. அடித்து சொல்லும் டிடிவி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர மற்ற அனைவரும் அமமுகவில் சேருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் இன்று நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். இதற்காக நேற்று தூத்துக்குடி சென்ற அவர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகளை அவர் கடுமையாக விளாசினார்.
தோல்வி
அவர் பேசியதாவது, மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதே கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூறி உள்ளது.
கொள்கை முடிவு
தமிழகத்தில் தாமிர உற்பத்தி ஆலை வேண்டாம் என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும்.
மோசமான ஆட்சி
ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது. மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நல்ல தீர்ப்பு வரும்
மக்கள் விரும்பாத, லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும்.
எடப்பாடி அரசு கவிழும்
பின்னர் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கவிழும்.
அமமுகவில் ஒரு கோடி பேர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்து உள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
எங்களுடன் சேர்கிறார்கள்
அ.தி.மு.க.வில் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க.வில் நாங்கள் சேர வேண்டிய அவசியம் இல்லை.
ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தவிர மற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேரலாம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.