முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என் தம்பியின் மரணத்துக்கும் தொடர்பு உள்ளது
கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகரஜின் கொலைகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்தொடர்பு உள்ளது என கனகராஜின் அண்ணன் தனபால் பகிரங்கக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
நீலகிரி: முன்னாள் முதல்வர் ஜெ.யின் கார் ஓட்டுநர் கனகராஜின் கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கனகராஜின் அண்ணன் தனபால் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 24ஆம் தேதி அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார்.
இந்த கொலையை நீலகிரி போலீசார் தீவிரமாக விசாரித்து, கொலையில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்தனர். அதில் முதல் குற்றவாளியாக ஜெயலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் மரணமடைந்தார் என போலீசார் கூறினர். ஆனால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் சர்ச்சை உண்டானது. அதையடுத்து நீலகிரி போலீசார் கனகராஜ் அண்ணன் தனபால் உள்பட நால்வரை விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தனபால், 'என் தம்பியின் சாவில் மர்மம் உள்ளது. அந்த சாலை விபத்தே மர்மமாக உள்ளது. காரணம் அங்கு விபத்து உண்டானதற்கான அறிகுறி இல்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொலை. என் தம்பியின் மரணத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்பு உள்ளது' என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் கொலைப் பழி சுமத்தப்பட்டும் அதற்கு அவர் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனபால் தானாகவே முதல்வர் மீது குற்றம்சுமத்தினாரா அல்லது அதற்கு பின்பும் ஏதும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதும் மர்மமே!