முதல்ல அறிவிக்க அதிகாரம் இருக்கான்னு பார்ப்போம்.. அப்புறம் அறிவிப்பு பத்தி பேசலாம்... பொன்முடி டமால்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு திட்டங்களை அறிவிக்க அதிகாரம் உள்ளதா என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு திட்டங்களை அறிவிக்க அதிகாரம் உள்ளதா என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வராக பதவியேற்றதே செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வராக தலைமைச் செயலகதில் இன்று பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அறிவித்தார். இந்த அறிவிப்புகள் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அரசு திட்டங்களை அறிவிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று கூறிய அவர், அவருடைய அரசாங்கமே தள்ளாடிக் கொண்டிருப்பதாக கூறினார். இப்படி இருக்கையில் அவரது அறிவிப்புகள் எப்படி செல்லும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பினாமி அரசு நடைபெறுவதாக கூறிய பொன்முடி, எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகள் போலியானது என தெரிவித்துள்ளார். இந்த அரசு நீடிக்காது என்றும் பொன்முடி கூறினார்.
அண்மையில் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.