8 வழிச்சாலை குறித்த விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடம் சமர்பிப்போம் : அன்புமணி
8 வழிச்சாலை குறித்த விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடத்தில் சமர்பிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சேலம் : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடத்தில் அறிக்கையாகச் சமர்பிப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தைத் தீவிர முனைப்போடு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் பாமக சார்பில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்த பாமக முடிவு செய்தது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அன்புமணி கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 5 மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று எதிர்க்கும் நிலையில் அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது.
5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு அதை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்பிக்க இருக்கிறோம். தேவைப்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மாற்றுப்பாதை குறித்தும் வலியுறுத்த உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட விவசாயக் கூலிகள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டங்கள் குறித்து சட்டசபையில் தவறான தகவல்களை அடுக்கி வருகிறார். சேலம் - சென்னை இரண்டே கால் மணி நேரத்தில் சென்னை வந்துவிடலாம் என்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை.
அதே போல, விவசாயிகள் தாமாக முன் வந்து நிலங்களை அரசுக்கு அளிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 வழிகள் இருக்கும் போது, இந்தத் திட்டம் எதற்கு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.