முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் நீக்கம்
முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்காக தியேட்டர்களில் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தியேட்டர்களில் ஒரு விளம்பரம் வெளியானது.
அதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறி, கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருவதை போலவும், அப்போது அந்த பெண் பெயரில் அர்ச்சனை செய்ய உடன் வந்தவர் கூறுவதை போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.
ஆனால், அர்ச்சனை செய்ய குருக்கள் கிளம்பும் வேளையில், இடைமறிக்கும், அந்த பெண், "சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு" என்கிறார். அதற்கு குருக்கள், எந்த சாமி பெயருக்கு என கேட்க, அந்த பெண்ணோ "நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயருக்குதான் என்கிறார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதல்வரை சாமியாக சித்தரித்த இந்த விளம்பரத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் நீக்கப்பட்டது என்று தெரிவித்தார்.