சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... 10 நிமிடங்கள் திக் திக்
சென்னை விமான நிலையத்தில் உள்ள லிப்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கினார். பிறகு லிப்ட் சரி செய்யப்பட்டு மீட்கப்பட்டார்.
சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி லிப்டில் பயணித்த போது அதில் நடுவழியில் சிக்கிக் கொண்டார். 10 நிமிடங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு லிப்டில் இருந்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மதுரையில் இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு சென்றார்.
அவர் செல்ல வேண்டிய விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்பட இருந்தது. அவர் முன்னதாகவே வந்து விட்டதால் 3-ஆவது மாடியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பின்பு விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதும் முதல்வர் 3-ஆவது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வருவதற்காக லிப்ட்டில் ஏறினார்.
அவருடன் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் உள்பட 7 பேர் லிப்ட்டில் ஏறினர். லிப்ட் 3-ஆவது தளத்தில் இருந்து கீழே இறங்கும் போது நடுவில் சிக்கி கொண்டு நின்று விட்டது.
அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவசர கால சைரனை ஒலிக்கச் செய்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து அந்த லிப்ட்டை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து லிப்ட் சரி செய்யப்பட்டதும் அதிலிருந்து வெளியே வந்த முதல்வர் எஸ்கலேட்டர் மூலம் கீழே வந்து பின்னர் வேறு ஒரு தனியார் நிறுவன விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.