முல்லை பெரியாறு அணையில் நீரை குறைக்கத் தேவையில்லை... தமிழக முதல்வர் பதில் கடிதம்
Recommended Video
சென்னை: முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரை குறைக்கத் தேவையில்லை என்று கேரள அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பின. இந்த வெள்ள நீர் மொத்தமுள்ள 14 மாவட்டங்களை சூழ்ந்து கொண்டன.
இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பி திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேரள அரசின் கடிதத்துக்கு பதில் எழுதியுள்ளார். அதில் அணை பாதுகாப்பாக உள்ளதால் அணையின் நீர் மட்டத்தை குறைக்க தேவையில்லை.
ஆக.4-இல் உச்சநீதிமன்றத்தால் நியமித்த மேற்பார்வை குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. மேலும் 142 அடி அளவுக்கு தண்ணீரை தாங்கும் அளவுக்கு அணை பாதுகாப்பாக உள்ளதாக குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 142 அடி தாண்டாத அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.