முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் இது தான்!
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
தமிழக அரசின் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கும்படி வலியுறுத்தியதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்கள் மற்றும் 135 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நதிநீர் பிரச்சனைகள் தொடருவதைத் தடுக்க காவரி நடுவர் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைபடுத்தும் குழு விரைவில் அமைக்க வலியுறுத்தி உள்ளோம்.
மேலும் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதால் அதிலும் பங்கேற்குமாறும் அவர் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.