தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது: மத்திய அரசுக்கு எடப்பாடி கடிதம்!
தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி கர்நாடாக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அமைச்சருக்கு கடிதம்
இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை ஆலோசிக்கவில்லை
தமிழகத்தை ஆலோசிக்காமல் கர்நாடகா மேகதாது அணை தொடர்பான முழு திட்டறிக்கையை அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கர்நாடகாவின் மேகதாது திட்டத்துக்கு தொழில்நுட்ப பொருளாதார ஒப்புதல் வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதி உத்தரவுக்கு எதிரானது
காவிரி விவகாரம் முடியும் வரை கர்நாடகாவின் எந்த திட்டத்துக்கும் எந்த ஒப்புதலும் வழங்கக்கூடாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடகாவின் நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவுக்கு எதிரானது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஸ்டாலின் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.