கண்ணாடி வீட்டுக்குள் கல் எறிவதா?.. ஓபிஎஸ் செய்த "முறைகேடுகள்".. லிஸ்ட் எடுக்கிறார் எடப்பாடியார்!
முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அவருடைய பதவிக் காலத்தில் செய்த "முறைகேடுகள்" குறித்து பட்டியல் தயாரிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளாராம்.
சென்னை: முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அவருடைய பதவிக் காலத்தில் செய்த முறைகேடுகள் குறித்து பட்டியல் தயாரிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகிறது.
இந்நிலையில் சசிகலா சிறை சென்றுவிட்டார். தினகரனின் கை ஓங்கியதால் கொங்கு மண்டலத்தினர் அதிருப்தி அடைந்தனர். இதனால் தினகரனை ஓரங்கட்ட முடிவும் செய்தனர்.
அதிமுக இணைப்பு
அச்சமயம் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு புறமும் கிரீன் சிக்னல் விழுந்தது. இதைத் தொடர்ந்து சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு தினகரன் அணியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதையும் மீறி பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
வலுக்கட்டாயமாக வம்பிழுப்பு
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமாரும், தம்பிதுரையும் ஓபிஎஸ் அணியை வலுக்கட்டாயமாக சீண்டினர். இதனால் பொங்கி எழுந்த ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி கடுமையாக விமர்சித்தார். அதற்கு எடப்பாடி அணியினர் பம்மினர். பின்னர் பேச்சுவார்த்தை குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறக் கூடாது என்று ஸ்டிரிக்டாக எடப்பாடி உத்தரவிட்டார். இருந்தாலும் குழப்பம் தீரவில்லை.
நிபந்தனைகள் நிறைவேறவில்லை
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக எடப்பாடி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சசிகலா, தினகரனின் பெயர்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் அணி மீண்டும் கறாராக தங்களது நிபந்தனைகளை கூறியது. மேலும் சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அணியின் செம்மலை, நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி அணியினருடன் இணைய வேண்டாம் என்று கூறுகின்றனர் என்றார். அதன் பின்னர் எடப்பாடி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.
மே தினத்தில்...
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மே தின பொதுக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபடநாடகம் ஆடுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி டி.டி.வி.தினகரனின் கூட்டாளி என்று தெரிவித்தார். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றவழக்கில் தொடர்புடையவருடன் முதல்வரை ஒப்பிட்டு பேசியதற்கு கடும் அதிருப்தி கிளம்பியது. இது தினகரனுடன் எடப்பாடியையும் சிக்க வைக்க அந்த அணியினர் முயற்சிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணியினர் சுற்றுப்பயணம்
இந்நிலையில் நாளை மறுநாள் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி குறித்து குற்றச்சாட்டுக்களை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. அவ்வாறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தால், பதிலடி கொடுக்க எடப்பாடி அணியும் தயாராகி வருகிறது. இதனால் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் ஓபிஎஸ் இருந்த போது நடந்த முறைகேடுகள் குறித்து பட்டியல் தயார் செய்யுமாறு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
சேகர் ரெட்டி தொடர்பு
மணல் மாபியா சேகர் ரெட்டிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், கிரானைட் முறைகேடுகள், தாதுமணல் முறைகேடு குறித்தும் அதில் விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட அனுமதிகள், சலுகைகள் குறித்தும் தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அப்புறம் அந்த அன்புநாதன் விவகாரம்
மேலும், அன்புநாதனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கவும் எடப்பாடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதா ஓ.பி.எஸ்.சிடம் நடத்திய விசாரணை தொடர்பான தகவலையும் திரட்ட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் அணியை எதிர்க்க எடப்பாடி அணியினர் வலுசேர்த்து வருகின்றனராம்.