நான் முன்னாள் முதல்வர்னா நீங்களும் மாஜி எம்.எல்.ஏக்கள்தான்... தினகரன் கோஷ்டியிடம் சீறிய எடப்பாடி
தம்மை பதவியில் இருந்து நீக்க நினைத்தால் ஆட்சியே கலையும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை எச்சரித்திருக்கிறார் எடப்பாடி.
சென்னை: தம்மை பதவியில் இருந்து நீக்க சதித்திட்டம் தீட்டினால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியை இழக்கும் நிலைதான் உருவாகும் என தினகரன் கோஷ்டியிடம் முதல்வர் எடப்பாடி சீறியதாக கூறப்படுகிறது.
தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வரும்போது பிரச்சனை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தினகரன்தான் இந்த தூதர்களை அனுப்பியும் வைத்திருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடியோ, நாங்க ஆட்சியையும் கட்சியையும் ஒழுங்காதானே நடத்திகிட்டு இருக்கிறோம்.. இப்ப எதுக்கு குடைச்சல் கொடுக்கிறீங்க? என கோபத்தைக் காட்டியுள்ளார்.
மேலும், நான் ஓபிஎஸ் மாதிரி இருக்கமாட்டேன்.. என்னை பதவியில் இருந்து இறக்க நினைச்சா நீங்கள் எல்லோரும்தான் பதவியை இழப்பீங்க.. நான் முன்னாள் முதல்வரானால் நீங்களும் மாஜி எம்.எல்.ஏ.க்களாகிடுவீங்க.. என்றும் எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அத்துடன் தினகரன் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான நபரை தொலைபேசியில் அழைத்தும் இதே கோபத்தை காட்டியிருக்கிறார் எடப்பாடி. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது சசிகலா தரப்பு.