இடைத் தேர்தல் ரத்து... எடப்பாடி & ஆதரவாளர்கள் 'ஹேப்பி'!
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து அறிவிப்பு யாருக்கு கசக்கிறதோ இல்லையோ... முதல்வர் நாற்காலியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது சில ஆதரவாளர்களுக்கும் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
இடைத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க பெரும் அச்சத்தில் தவித்தவர்கள் எடப்பாடி அன்ட் கோதான் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. காரணம், இந்தத் தேர்தலில் அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, ஜெயித்து முதல்வராகிவிடலாம் என்ற டிடிவி தினகரனின் திட்டமே.
ஆரம்பத்தில் தினகரனாவது ஜெயிப்பதாவது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரச்சாரத்தின் போது, தினகரன் ஆதரவாளர்களை மக்கள் விரட்டுவதாக சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் அதே மக்கள்தான் தினகரனுக்கு ஆரத்தி எடுத்து, மறைவாக பணத்தையும் வாங்கிக் கொண்டு போனார்கள்.
தேர்தலின் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, தினகரனுக்கும் திமுகவுக்கும்தான் கடும்போட்டி என்று முடிவு வந்ததாகவும், இது நல்லதல்ல என முடிவு செய்த மத்திய மேலிடம்தான், இந்த தேர்தல் ரத்துக்கான ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக முடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தல் முடிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்களுக்கு நிம்மதியைத் தந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ரகசியமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறார்களாம்.