ஆதார் எண் பெற்ற பள்ளி மாணவர் விபரம் சேகரிப்பு பணி தீவிரம்: ஜூலை 15க்குள் முடிக்க உத்தரவு
நெல்லை: சமையல், வங்கி கணக்கு, எரிவாயு, வாக்காளர் பட்டியலை தொடர்நது பள்ளி மாணவர்கள் விபரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை ஜூலை 15ம் தேதிக்குள் முடிக்க கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் எண், ஆதார் அடையாள அட்டை அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் ஆதார் எண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் விபரத்தை சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் ஆதார் எண் பெறற மாணவ-மாணவிகள், பள்ளிகளில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள், விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் என பிரித்து மாணவர்களின் எண்ணிக்கையை வழங்குமாறு தொடக்க கல்வி, மெட்ரிக் கல்வி இயக்குனர்கள் கேட்டு கொண்டுள்ளனர். அனைத்து வகை பள்ளிகளும் இது தொடர்பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஜூலை 12ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விபரங்களை பெற்று சரி பார்த்து மாவட்டத்தின் தொகுப்பு அறிக்கையை ஜூலை 15ம் தேதிக்குள் மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுளளது.
இந்த உத்தரவு அனைத்து கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் உள்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.