கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, 2-நாள் மாணவர் சேர்க்கை திருவிழா
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video
கிருஷ்ணகிரி: அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் மாணவர் சேர்க்கை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா இன்று நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, 2 நாள் நடைபெறும் இந்த விழாவினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வித்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களும், பெற்றோர்களும் அறிந்துகொள்ளும் வகையில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், நிகழாண்டில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி அரசு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது. பல்வேறு துறைகளின் மூலம் பெறப்படும் கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி பயிற்றுவிக்கப்படும் என ஆசிரியர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, பெற்றோர்கள் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாணவர் சேர்க்கை திருவிழாவின் முதல் நாளான இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற 17 மாணவ, மாணவிகள், தங்களது மாற்றுச் சான்றிதழ்களோடு வந்து அரசு பள்ளியில் சேர்ந்தனர்.