விவசாயத்தை இழிவுபடுத்துகிறதா, ஹோட்டல் மேனேஜ்மென்ட் காலேஜ் விளம்பரம்?
சென்னை: ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சொல்லிக்கொடுக்கும் கல்லூரி ஒன்று தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டுவரும் வீடியோ விளம்பரம் விவசாயத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கோடை காலத்தில், வெயிலுக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, டிவியில் காட்டப்படும் அந்த ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பலரும் பயப்படுகிறார்கள்.
ஏனெனில், திரும்பத்திரும்ப, பலமுறை அந்த கல்லூரி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு, எல்லோரும், ஹோட்டல் மேனேஜ்மென்ட்டை நம்பி வாழ்வதை போன்ற தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன.
ராதிகா விலகல்
ஸ்நேகா, ராதிகா போன்ற சினிமா பிரபலங்கள் கடந்த ஆண்டு, இந்த கல்வி நிறுவன விளம்பரங்களில் நடித்தனர். ஒரு கட்டத்தில், கேலி, கிண்டல், சர்ச்சை அதிமாகவே, அந்த கல்வி நிறுவன விளம்பரங்களில் இனி நடிப்பதில்லை என்று ராதிகா அறிவித்தார்.
கோடை விடுமுறை
இந்நிலையில், இவ்வாண்டு கோடை விடுமுறை முடியும் தருவாயில் மீண்டும் பலே விளம்பரங்களுடன் களமிறங்கியுள்ளது, அந்த கல்வி நிறுவனம்.
விவசாயம் மீது தாக்கு
இதில், தங்களது கல்லூரியின் அருமை, பெருமைகளை சொல்லி விளம்பரம் செய்துகொள்வதோடு விட்டிருந்தால் கூட சர்ச்சை எழுந்திருக்காது. ஆனால், விவசாயம் செய்வதை இழிவுபடுத்தும்விதத்தில் விளம்பரம் ஒளிபரப்பாவதுதான் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இதுவல்லவோ பெருமை
அந்த விளம்பரத்தின் காட்சி இப்படி விரிகிறது: கிராமத்தில் விவசாயம் பார்க்கும், ஒரு விவசாயி தனது மகன் ஊரில் வேலையில்லாமல் சுற்றி திரிந்ததாகவும், இப்போது, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்ததால் கோட், சூட் என்று ஆளே மாறிவிட்டதாகவும், பெற்றோருக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் என்றும் கூறுவது போல அந்த விளம்பரம் உள்ளது.
பசுமையான கிராமம்
அந்த காட்சிகளில் காண்பிக்கப்படும் விவசாய கிராமம், தண்ணீர் சூழ்ந்து, பசுமையான வயல் வெளிகளோடுதான் உள்ளது. ஆயினும் மகன், விவசாயம் பார்க்காமல், கோட், சூட் மாட்டிக்கொள்வதுதான் அந்த விவசாயிக்கு பெருமையாக உள்ளது என்பது போல விளம்பரம் சித்தரிக்கிறது.
எதிர் விளைவு
கிராமப்புறங்களில் விவசாயம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற விளம்பரங்கள், விவசாயிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
நேரடி தாக்கு
செழிப்பான ஒரு இடத்தில் விவசாயம் பார்ப்பதை விட, ஹோட்டல்களில் உணவு சப்ளை செய்வதுதான் கவுரவமான வேலை என்று கிட்டத்தட்ட நேரடியாகவே கூறிவிடுகிறது இந்த விளம்பரம்.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
உணவு உற்பத்தியின்றி, எப்படி வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல்கள் சாப்பாட்டை சப்ளை செய்ய முடியும்? என்ற சிறு கேள்வி எழுந்திருந்தாலும், உணவு உற்பத்தி மீதான கேலியை இந்த விளம்பரம் தவிர்த்திருக்க முடியும்.
சமூக நீதி என்னாவது
எந்த ஒரு வேலையும் இழிவு கிடையாது என்ற புரிதல் நாகரீக சமூகத்தில் வந்துவிட்ட இந்த சூழ்நிலையில், ஒரு வேலையைவிட மற்றொரு வேலை சிறந்தது என்று ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படுவது சமூக நீதிக்கும் எதிரானதுதான்.
வள்ளுவருக்கே பாடமா
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம், தொழுதுண்டு பின்செல் பவர். என்று உழவுதான் அனைத்தைவிடவும் முக்கிய தொழில் என்று பொய்யா மொழியார் கூறிய தமிழகத்தில், உழவு மோசமான செயல் என்பதை போல காட்டும் விளம்பரம் தேவையா? சம்மந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?