ஜெ.வுக்காக பூஜை… யாகத்தில் மயக்கமடைந்த கல்வி அமைச்சர்.. தர்மபுரியில் பரபரப்பு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி தர்மபுரியில் யாக பூஜை நடத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அதே இடத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாக பகுதியில் பிரகதாம்பாள் அருளீஸ்வரர் கோயில் உள்ளது. ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்று இந்தக் கோயிலில் நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. அப்போது, யாகத்தின் போது எழுந்த புகையால் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து அதே இடத்தில் சாய்ந்துவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அமைச்சரை கோயில் வளாகத்தில் இருந்து புகையில்லாத பகுதிக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றனர். சுமார் அரை மணி நேரம் வரை அவருக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டன. அதன் பிறகுதான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. இதனைத் தொடர்ந்து அவர் யாக பூஜைகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
அதேபோல, நேற்று அரூர் சட்டப் பேரவை உறுப்பினர் முருகன் தலைமையில் பழையபேட்டை காளியம்மன் கோயிலில் 7 வகை யாகம், 603 பால்குட ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் கடத்தூர் விநாயகர் கோயிலில் 7 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இது போன்றே, கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்வர் நலம்பெற வேண்டி பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.