பிரபாகரன் படத்தை மார்பிங் செய்து போஸ்டர் அடிப்பதா?.. விஜயகாந்த் மீது ஈழத் தமிழர்கள் பாய்ச்சல்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை மார்பிங் செய்து விஜயகாந்த் படத்தை ஒட்டியதற்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் கடந்த 25-ந் தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பீனிக்ஸ் என எழுத்துகள் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி விஜயகாந்துக்கு அவர்கள் ஊட்டி மகிழ்ந்தனர். அதேபோல் விஜயகாந்தும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோருக்கு கேக் ஊட்டி நெகிழ்ந்தார்.
இந்த நிலையில் ஆரணி தேமுதிகவினர் வைத்த பேனர் ஒன்று சர்சையாக உலகம் முழுவதும் வெடித்துள்ளது. விஜயகாந்த் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இருக்கும் படம் ஒன்றில் பிரபாகரன் முகத்தை நீக்கிவிட்டு விஜயகாந்த் படத்தை மார்பிங் செய்து வைத்திருக்கின்றனர்.
இப்படம் ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது ஈழத் தமிழர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "எங்கள் தேசியத் தலைவர் உருவத்தை சிதைத்திருப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்" எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.
திருட்டு டிவிடி விவகாரத்தில் இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த பஞ்சாயத்தே ஓயாத நிலையில் தற்போது தேமுதிகவினரால் விஜயகாந்தும் வம்பில் சிக்கியுள்ளார்.