தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிகரிப்பு- அமைச்சர் பழனியப்பன்
நெல்லை: ஒரு பேராசிரியர் பெயரில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவது, மற்ற பேராசிரியர்களுக்கு எல்லாம் பெருமை தரக்கூடியது என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தமிழகத்தில் உயர் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வெள்ளி விழா நுழைவு வாயில் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் பழனியப்பன், இந்திய வரலாற்றில் நெல்லைக்கு என தனிச்சிறப்பு உண்டு. நெல்லை மண்ணில் பிறந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ‘மனோன்மணியம்‘ என்ற நாடகத்தை இயற்றி சிறப்பு பெற்றார். அவர் படைப்பாளி மட்டும் அல்ல. சிறந்த தத்துவ பேராசிரியர்.
ஒரு பேராசிரியர் பெயரில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவது, மற்ற பேராசிரியர்களுக்கு எல்லாம் பெருமை தரக்கூடியது ஆகும். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து என்றும் நிலைத்து இருக்கும்.
இந்த பல்கலைக்கழகம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சுமார் 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெள்ளி விழா கொண்டாடும் இந்த பல்கலைக்கழகம் உயர கல்வியில் சாதனை படைக்கும் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்றார்.
இந்தியா முழுவதும் 693 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு பல்கலைக்கழகங்களை தொடங்கி வைத்தார். மீன்வளம், இசை, விளையாட்டு மற்றும் பெண்களுக்கு தனி பல்கலைக் கழகம் உள்ளது.
அண்ணா பல்கலை கழகத்திற்கு லண்டனில் மதிப்பு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை மண்டல அலுவலகங்களாக ஒருங்கிணைந்து, ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உலகில் எந்த பல்கலைக்கழகத்துக்குச் சென்றாலும், அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சொன்னால், அனைத்து பேராசிரியர்களுக்கும் தெரிகிறது. அந்த அளவுக்கு புகழ் பெற்றது நமது அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழகத்தில், படித்தவர்கள் உலக அளவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.
சென்னை காரப்பாக்கத்தில் தொடங்கப்படும் ஆசிரியர் கல்வி பல்கலை கழகத்திற்கு 10 ஏக்கரில் ரூ.,9 கோடியில் வாளகம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டு 23 சதவீதமாக இருந்தது. இது இப்போது 42 சதவீதமாக உயர்ந்துளளது.
வெளி நாடுகளில் வேலை செய்பவர்கள் அந்த மொழிகளில் தெளிவாக உச்சரிக்க வெளிநாட்டு பேராசிரியர்களை வரவழைத்து பல்கலைக் கழகங்களில் பயிற்சி பட்டறை நடத்தப்படும். வீடியோ மூலம் கற்று தரப்படும் ஸ்மார்ட் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய பல்கலை கழக மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்காத நிலை உள்ளது. வெளிநாட்டு பல்கலை கழகங்களில் ஒரு மாணவருக்கு சராசரியாக 810 புத்தகஙகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஓரு மாணவருக்கு 9 புத்தகங்கள் என்ற அளவிலேயே உள்ளன. இந்த நிலையை மாற்ற பல்கலை கழகங்களில் டிஜிட்டல் லைப்ரரி திட்டம் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு சம கல்வி, தனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நெறிமுறைகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தொடர்ந்து விழா மேடையில், பேராசிரியர் செந்தில் நாயகம் எழுதிய "வ.உ.சி.யின் வாழ்க்கை" என்ற நூலையும், பல்கலைக்கழகத்தின் 3 ஆண்டு சாதனை மலரையும் அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார்.
தமிழ் அறிஞர்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் அறிஞருக்கான விருது சீனி விசுவநாதனுக்கும், இந்த ஆண்டுக்கான விருது இளையபெருமாளுக்கும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு விருதும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இளையபெருமாள் மறைந்து விட்டார். அதனால், அந்த விருதை அவருடைய மகன் மாணிக்கவாசகர் பெற்றுக் கொண்டார்.