முதல்வர் குறித்து அவதூறு.. எம்எல்ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்!
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு எழும்பூர் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு எழும்பூர் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிக்சாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் வழக்குப்பதிவு
இதனிடையே சென்னையில் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
[Exclusive: இது சின்ன விஷயம் இல்லை.. எழுந்து நின்று பாராட்டுவோம் இந்த மாபெரும் ஆசிரியைகளை! ]
நேற்று முன்தினம் கைது
கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கருணாஸ் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
போலீஸ் மனு
இதுதொடர்பாக எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் போலீசார் மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாத், கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி நேற்று மீண்டும் கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி!]
7 நாள் காவல்
அப்போது கருணாஸ் மீதான கொலைமுயற்சி வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் அக்டோபர் 4-ந்தேதி வரை கருணாசை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கருணாஸ் மனு
இதையடுத்து கருணாஸ் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் , எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கருணாஸுக்கு ஜாமீன்
இந்நிலையில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கடந்த 16ஆம் தேதி அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று மீண்டும் விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.