அமைச்சரின் வருகைக்காக "சேர்" போட்டு "லிப்டில்" இடம்பிடித்த ஜி.எச்... நோயாளிகள் அவதி!
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வருகைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் இருந்த லிப்ட் ஒரு மணி நேரமாக இயக்கப்படாமல் இருந்தது.
சென்னை: எழும்பூரில் உள்ள தாய் சேய் மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் வருகையையொட்டி, அங்கிருந்த லிப்டை நோயாளிகள் பயன்படுத்தாதபடி இரு கதவுகளுக்கு மத்தியில் நாற்காலி வைக்கப்பட்டிருந்தது.
எழும்பூர் தாய் சேய் அரசு மருத்துவனையில் 24 மணி நேரமும் இலவசமாக பிரசவம் பார்க்கப்படுகிறது. இங்கு பெரும்பாலும் சிகிச்சை நன்றாக உள்ளதால் ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் என கர்ப்பத்தின்போது பரிசோதனை செய்வது, பிரசவம் பார்த்துக் கொள்வது, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வது என மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தாய் சேய் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்து ஆய்வு நடத்தவிருந்தார். அதற்கு முன்னதாக அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இருந்தே லிப்டை நோயாளிகள் பயன்படுத்தாத நிறுத்தப்பட்டது.
அமைச்சர் வந்தவுடன் காத்திருக்காமல் லிப்டில் "சொய்யினு" செல்ல வேண்டும் என்பதால் லிப்டின் இரு கதவுகளுக்கு நடுவில் கட்டை சேர் வைக்கப்பட்டது. லிப்ட் இயக்காதது குறித்து பணியாளர்களிடம் கேட்டபோது அமைச்சர் வந்து விட்டு செல்லும் வரை லிப்ட் இயக்கப்படாது என்று தெரிவித்தனர்.
இதனால் கர்ப்பிணிகளும், குழந்தையை பெற்ற தாய்மார்களும், அவர்களை பார்க்க வந்த முதியவர்களும் படிக்கட்டு வழியே சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.