பயணிகளின் பசி தீர்க்க... எழும்பூர் ரயில் நிலையத்தில் “சீல்” வைக்கப்பட்ட ஹோட்டல்களை திறக்க முடிவு
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் சீல் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள் பயணிகளுக்காக இம்மாத கடைசியில் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் இந்த ரயில் நிலையம் வழியாக சென்று வருகிறது. இதனால் சராசரியாக தினசரி 2 லட்சம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்காக 4 ஆவது பிளாட்பாரத்தில் உணவகங்கள், தங்கும் விடுதி, புத்தகக்கடைகள். பால் பூத், கழிப்பிடங்கள், தகவல் மையம், பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 4 ஆவது பிளாட்பாரத்தில் செயல்பட்டு வந்த சைவம் மற்றும் அசைவ உணவகங்கள் ரயில்வே அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், "எழும்பூர் ரயில் நிலையத்தில் தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தம் பெற்றவர்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு ரூபாய் 2.2 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். இந்த தொகையை செலுத்த பல முறை கூறியும் செலுத்தவில்லை. இதனால் ரயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் இன்னும் இருப்பதால், தொகையை செலுத்திவிட்டு ஹோட்டல்களை நடத்துமாறு ஒப்பந்ததாரரிடம் பேசி வருகிறோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் நலன் கருதி இம்மாத இறுதியில் மீண்டும் இந்த 2 ஹோட்டல்களை திறந்து விடுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.