காவிரி.. மத்திய அரசைக் கண்டித்து மஜக எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம்!
மத்திய அரசைக் கண்டித்து மஜக சார்பில் எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று மதியம் எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக மனிதநேய ஜனநாயக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன கடையடைப்புப் போராட்டமும் நடந்து வருகிறது.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பேசுகையில், கடையடைப்பு போராட்டத்திற்கு மஜக முழு ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்களத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் , இன்று மதியம் மூன்று மணிக்கு மத்திய அரசைக் கண்டித்து எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடக்கவுள்ளதாக மஜக அறிவித்துள்ளது.
இந்தப்போராட்டத்தில் மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.