சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு- 6 பேர் கைது!!
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இம்முறைகேடு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் சர்வதேச விமானநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் உள்பட அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி செலுத்தி அதன் பின்னர் பொருட்களை எடுத்து உரியவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் சமீப காலமாக சுங்கவரியை முறையாக பயணிகளிடம் வசூல் செய்யாமல் விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரி லாசர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகம் முழுவதையும் அங்குலம், அங்குலமாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.