நெல்லை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு கழிவறைகள்.. மொத்தம் 80,000 கட்ட திட்டம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 80 ஆயிரம் தனிநபர் கழிவறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் பல கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் பல வீடுகளில் இன்னும் தனி நபர் கழிவறைகள் அமைக்கப்படவில்லை.
இதனால் பலர் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நிர்மல் பாரத் அபியான்...
இந்த காரணத்தால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் நிர்மல் பாரத் அபியான் (முழு சுகாதார திட்டம்) கீழ் நவீன கழிப்பிடம் கட்ட நிதி ஓதுக்கியுள்ளது.
ரூ. 12,000 மானியம்...
இதன்படி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முழு சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.5700ம், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.4600ம், பயனாளிகள் பங்கு தொகையாக ரூ.900ம் ஆக மொத்தம் ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கி வருகிறது.
பயிற்சி வகுப்பு ...
இதன்படி நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து கலெக்டர் கருணாகரன் பேசுகையில் கூறியதாவது...
80,000 கழிப்பறைகள்..
‘‘நெல்லை மாவட்டத்தில் 2லட்சத்து 188 இல்ல கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் 80 ஆயிரம் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டி முடிக்கப்படும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தி..
இப்பயிற்சியில் பங்குபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திட முனைப்புடன் செயல்பட வேண்டும்'' என்றார்