எல்நினோ தாக்கம்... நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறையும்
எல்நினோ தாக்கத்தினால் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாகவே இருக்கும் என்று ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: இந்தியாவில் கடந்த ஆண்டு தென்மெற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. நடப்பாண்டிலும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாகவே இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் கணித்துள்ளது.
ஆண்டுதோறும், ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழையால், கேரளா உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பலன்பெறும். கடந்த, 50 ஆண்டுகளில் இந்தியாவில் பெய்த மழையின் சாரசரி அளவை கொண்டு எல்.பி.ஏ., எனப்படும் நீண்டகால மழை சராசரி கணக்கிடப்படும்.
நடப்பு ஆண்டில், ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவ மழை பொழிவு ஆண்டுசாரசரியை விட குறைவாக இருக்கும் என, ‛ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மைய அமைப்பு கணித்துள்ளது.
ஆண்டுதோறும் 88.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். இதில், 96 சதவீதம் முதல், 104 சதவீதம் வரை மழை பெய்தால், சராசரி மழை என கருதப்படும். 90 சதவீதம் முதல், 96 சதவீதம் வரை இருந்தால், சராசரியை விட குறைவு என கணக்கிடப்படும்.
சராசரியை விட அதிகம்
தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் 376.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 20 சதவீதம் அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறைவான பருவமழை
2011ஆம் ஆண்டு 298.9 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அது சராசரியை விட 6 சதவீதம் குறைவு. 2012ஆம் ஆண்டு 243.5 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது சராசரியை விட 23 சதவீதம் குறைந்தது.
2014-15 ஆண்டு தென்மேற்கு பருவமழை
2014ஆம் ஆண்டு 321.5 மில்லி மீட்டர் மழை பெய்து சராசரியை விட 1 சதவீதம் அதிகரித்தது. 2015ஆம் ஆண்டு 285.8 மில்லி மீட்டர் மழை பெய்து, சராசரியை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.
பருவமழை குறைவாக பெய்யும்
கடந்த 2016 நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ ஆக இருந்தது. இந்தாண்டு 2017 நாட்டின் தென்மாநிலங்களில் 89 செ.மீ க்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று ஸ்கைமெட் அறிவித்துள்ளது.
எல் நினோ' ஏற்படுத்தும் பாதிப்பு
பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்ப நிலை மாறுபாடு, எல் நினோ' என, கூறப்படுகிறது. இது, இந்திய பருவமழைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எல் நினோவால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும். சராசரியை விட குறைவாக மழை பொழிவு இருக்கும் என, ஸ்கைமெட் அமைப்பு கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த மாதம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவில் நல்ல மழை
தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஸ்கைமெட் தனியார் வானிலை அறிவிப்பு மையம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.