இது "2ஜி" கூட்டணி.. திமுக, காங். கூட்டணியை விமர்சிக்கும் இல.கணேசன்
ஈரோடு: தமிழக தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளது 2 ஜி கூட்டணி போன்றதுதான் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கிண்டலடித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று கோபியில் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''பாரத நாட்டை பொறுத்த வரை பயங்கரவாதம் என ஒரு நிலைமை வந்தால் அதை ஒடுக்க இந்தியன் என்ற முறையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
தற்போது சிலர் மோடி அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக நினைத்து பயங்கரவாத நடவடிக் கைகளுக்கு ஊக்கம் தருகின்றனர். அரசை விமர்சிப்பதாக நினைத்து தயவு செய்து பயங்கரவாத நடவடிக்கைக்கு ஊக்கம் தராதீர்கள்.
தமிழகத்தில் யாருடன் யார் கூட்டணி என்ற குழப்ப நிலை உள்ளது. குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்த பின் நாங்கள் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தி.மு.கவுடன் காங்கிரஸ் இணைவது இயல்பான கூட்டணி. இதற்கு முன் அமைந்த கூட்டணி சோனியாவும், கருணாநிதியும் முயற்சித்து அமைந்த கூட்டணி. இந்த கூட்டணி ராகுல் மற்றும் ஸ்டாலின் முயற்சியால் ஏற்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை கூட்டணியாகும்.
அதாவது இக்கூட்டணி 2ஜி கூட்டணி. தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. ஒரு வாரத்துக்குள் தெளிவு பிறக்கும் என நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.