இளங்கோவன் -வாசன் ஆதரவாளர்கள் போட்டி கூட்டத்தால் பரபரப்பு...நெல்லையில்!
நெல்லை: நெல்லையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அருகருகே போட்டிக் கூட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ஜிகேவாசன் வரும் 28ம் தேதி திருச்சியில் தனிக்ட்சி தொடங்குகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்துகொள்ள கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நெல்லை மாநகர் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராம்நாத் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஜிகே வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூடடம் நடத்தியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது பலத்தை நிரூபிக்க இந்த அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு கூட்டமும் அருகருகே நடந்ததால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.