பழைய ரூபாய் நோட்டை மாற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் பலி.. கோவையில் சோகம்
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றச் சென்ற முதியவர் நீண்ட வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கோவை: கோவையில் 500 மற்றும்1000 ரூபாய் பழைய நோட்டுகளை மாற்ற அஞ்சல் நிலையத்திற்கு சென்ற 57 வயது முதியவர் நீண்ட வரிசையில் காத்திருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழிந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 57 வயதான இவர், தான் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை அஞ்சலகத்தில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி வெயிலுக்கு முன்னதாக கணபதி மூர்மார்க்கெட் அஞ்சலகத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது அவருக்கு முன்னால் ஒரு பெரிய கூட்டம் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு இருந்தது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாத முதியவர், வீட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் பணத்தை மாற்றுவதற்காக காத்திருந்த நீண்ட வரிசையில் தானும் போய் நின்று கொண்டார். கால்கடுக்க நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலகத்தில் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில், ராமச்சந்திரன் திடீரென நின்ற இடத்திலேயே நெஞ்சில் கை வைத்துக் கொண்டு மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி பார்க்கும் போது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ம் தேதியில் இருந்து பழைய நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இளையவர்களே வரிசையில் நிற்க முடியாமல் திணறி வரும் நிலையில், முதியவர்கள் நிலை மிக மோசமாகவே உள்ளது. முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பழைய நோட்டுகளை மாற்றித் தரப்படும் என்றும் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், உண்மை நிலை வேறாகவே இருந்து வருகிறது.
ஒவ்வொரு வங்கியிலும், பழைய நோட்டுகளை மாற்ற வரும் முதியவர்களுக்கென்று தனி வரிசைகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அவர்கள் உட்காருவதற்கான நாற்காலி வசதிகளை வங்கிகள் ஏற்படுத்தி தர வேண்டும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.