சம்பந்தி வீட்டில் 1 கோடியைப் பதுக்கிய அதிமுக வேட்பாளர்... பறிமுதல் செய்த பறக்கும் படை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி.டி.சிவசுப்பிரமணியம் என்பவர் தனது சம்பந்தி வீட்டில் ரூ. 1 கோடியைப் பதுக்கி வைத்திருந்தார். ஆனால் பறக்கும் படையினர் அதை கண்டுபிடித்து போய் பறிமுதல் செய்து விட்டனர்.
மொடக்குறிச்சி வேட்பாளர் சிவசுப்பிரமணியத்தின் சம்பந்தி பாலசுப்பிரமணியம் - சித்திராதேவி தம்பதி. இவர்கள் கணபதிபாளையம் ராம்நகரில் வசித்து வருகிறார்கள். பாலசுப்பிரமணியம் வீட்டில் சிவசுப்பிரமணியம் பணம் பதுக்கியிருப்பதாக ரகசிய தகவல் தேர்தல் கமிஷனுக்கு போக, நேற்று மாலை 5 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியம், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஷியாம் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கு பணம் சிக்கியது. இதற்கு பாலசுப்பிரமணியிடம் கணக்கு இல்லை. இதையடுத்து இந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
பாலசுப்பிரமணியம் இத்தனைக்கும் தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்ப்பவர் ஆவார். அவர் வீட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என நினைத்து அங்கு கொண்டு போய் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். ஆனால் பறக்கும் படையினர் சரியாக மோப்பம் பிடித்து வந்து பறிமுதல் செய்து சென்று விட்டனர்.