மனிதநேய மக்கள் கட்சியில் சமாதானம்: தமீமுன் அன்சாரியின் போட்டி பொதுக்குழு திடீர் ரத்து
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கியதை அடுத்து எழும்பூரில் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் நடைபெற இருந்த போட்டி பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தாம்பரத்தில் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.
வெற்றி வாய்ப்பு
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று வறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
கருத்து வேறுபாடு
இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவானது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
2 இடங்களில் பொதுக்குழு
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் எழும்பூரில் மாநில பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னை தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் த.மு.மு.க.,தலைவர் ரிபாயி தலைமையில் பொதுக்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் பொதுக்குழுக்கள் கூடுவதால் எந்த அணியின் கூட்டத்திற்கு செல்வது என கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டது.
கட்சியை உடைக்க சதி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்ததலைவர் ஜவஹிருல்லா, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறதது என்று கூறிய அவர், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர் என்றும் கூறினார்.
உண்மையான மமக
அதேநேரத்தில் நாங்கள்தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி என்று பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர்தான் கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் உரிமை உள்ளது என்றும்,தாம்பரத்தில் பொதுக்குழு கூடுவது உண்மையானதல்ல. எங்களுக்குத்தான் கட்சியின் ஆதரவு இருக்கிறது. இந்த கூட்டத்தில் எங்களின் நிலைப்பாடு பற்றி அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.
போட்டி பொதுக்குழு ரத்து
இந்த நிலையில் அன்சாரியின் தலைமையிலான பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது. கட்சியின் நலனைக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அன்சாரி, என்னிடம் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டினர். வேறு வழியின்றி பொதுக்குழு கூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றா. கட்சி உடைந்து போய்விடக்கூடாது என்று பலரும் அக்கறை காட்டினர்.
சமாதான முயற்சி
42 மாவட்ட செயலாளர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு சீமான், திருமாவளவன், 24 முஸ்லீம் அமைப்புகளும், நீங்கள் பெருந்தன்மையாக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டனர். கட்சியின் நலனைக் கொண்டு விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர் மக்களின் நம்பிக்கையை சிதைத்து விடக்கூடாது என்று நான் பொதுக்குழுவை ரத்து செய்துள்ளேன் என்றார்.
அவசர ஆலோசனைக் கூட்டம்
48 மணிநேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மனதை காயப்படுத்திவிட்டது. தனி நபரின் பிடிவாதத்தை விட கட்சியின் நலன் முக்கியம் என்று முடிவெடுத்துள்ளோம். பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க செல்லுமாறு அனுப்பியுள்ளோம் என்றும் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார். இதனிடையே தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.