'I' போட்டால் ராம்நாத்கோவிந்த்...'II' போட்டால் மீராகுமார்.. இப்படித் தான் ஓட்டு போடனுமாம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் ஓட்டளிப்பதற்காக தேர்தல் ஆணையம் சில விதிகளை கூறியுள்ளது.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று சில விதிகளை அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் குடிமகனை மக்கள் பிரதிநிதிகள் இன்று தேர்ந்தெடுக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப எம்பி, எம்எல்ஏக்களின் வாக்குக்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதன்படி எம்பிக்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்எல்எக்கள் வாக்களிக்க பிங்க் நிற ஓட்டுச் சீட்டும் சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் இருக்கும். இந்த வாக்குச் சீட்டில் ஒன்று எனப் போட்டால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களித்தாக குறிக்கும், இரண்டு என்று போட்டால் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு ஓட்டு போட்டதாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று, இரண்டு என்று எண்களில் போடாமல் ரோமன் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்தல் ஆணையம் கொடுக்கும் பேனாவில் தான் இவற்றை எழுதி கொடுக்க வேண்டும், எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் பேனாவில் எழுதி வாக்களித்தால் அவை செல்லாதவையாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒன்று, இரண்டு தவிர வேறு எந்த கிறுக்கல்களும் வாக்குச் சீட்டில் இருக்கக் கூடாது என்பதோடு குறியீடுகள் ஏதேனும் அதில் இருந்தாலும் அவை செல்லாதவையாகிவிடும்.