பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியாத அதே அதிகாரி பிரவீன் தான் இப்போதும் நியமனம்!
கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியாத அதே தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தான் இப்போதும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் என்றால் கடந்த முறை பணப்பட்டுவாடா அமர்க்கலப்பட்ட போது அதனை கட்டுப்படுத்த முடியாத அதே அதிகாரி தான் தற்போதும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் இந்த முறையாவது நடக்குமா என்பது வேட்பு மனு தாக்கலில் இருந்தே தொடங்கிவிட்டது. அதிகபட்ச சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி, விஷால், தீபா மனு நிராகரிப்பு என்று தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பன்று நடந்த நாடகங்கள் தான் இதில் உச்ச கட்டம். முதலில் நிராகரிக்கப்பட்டு பின்னர் ஆதாரம் அளித்ததும் இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும், மீண்டும் 11 மணியளவில் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வேலுச்சாமியை மாற்ற கோரிக்கை
விஷால் மனு நிராகரிப்பு விஷயத்திலேயே தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மீது விஷால், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து வேலுச்சாமியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதே பிரவீன் நாயர்
இதன்படி வேலுச்சாமிக்கு பதிலாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வடக்கு) பிரவீன் பி.நாயரை தேர்தல் நடத்தும் அதிகாரிகயாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் இவர் தான் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை
ஆனால் அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது ஆர்கே நகரில் விநியோகம் செய்யப்பட்ட பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரி தடுத்து நிறுத்தவில்லை என்பது தான். இன்றும் கூட பணப்பட்டுவாடா செய்வதற்காக வாக்காளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பாஜக வேட்பாளர் நாகராஜன், தமிழிசை உள்ளிட்டோர் மறியல் செய்தனர்.
சந்தேகம்
இந்நிலையில் கடந்த முறை இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்தாத அதே தேர்தல் அதிகாரி இந்த முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த முறையாவது இவர் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவாரா
அல்லது கடந்த முறை போல இந்த முறையும் இடைத்தேர்தல் தடைபட்டுவிடுமா என்று கேள்விகள் எழுகின்றன.
எப்படி சமாளிப்பார்?
எனினும் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருடன் மேலும் 10 ஐஏஎஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே தேர்தலை நியாயமாக நடத்துமா ஆணையம், சவால்களை எப்படி பிரவீன் நாயர் சமாளிக்கப் போகிறார் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.