உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எனத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மாதம் 17 மற்றும் 19 ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கிராமப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையும், நகர்புறங்களில் மின்னணு எந்திரம் மூலமும் வாக்குப் பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்து, தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணி இடங்களை சில இடங்களில் ஏலம் விட்டு நிரப்ப உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய சட்டத்திற்கு புறம்பான ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை தடுப்பதுடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் இது போன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணரச் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது''என்று கூறப்பட்டுள்ளது.