அதிமுக விதிகளில் மாற்றம் கூடாது.. தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கே.சி.பழனிச்சாமி
அதிமுக விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோர் தீயாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சின்னம் மற்றும் கட்சி தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு நேற்று மினி லாரியில் தேர்தல் ஆணையத்தில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை தாக்கல் செய்தது.
6 மாதத்தில் தேர்தல்
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதில் அடுத்த 6 மாதத்துக்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்த மாற்றமும் செய்யக்கூடாது
அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிமுக அடிப்படை உறுப்பினர்களின உரிமைகளை தேர்தல் ஆணையம் காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு
இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தீர்மானத்துக்கு எதிராக
இந்நிலையில் அந்த தீர்மானத்துக்கு எதிராக கேசி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கேசி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.