இரட்டை இலை சின்னம்.. தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !
அதிமுக சின்னத்தை பயன்படுத்தியது தொடர்பாக ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை: அதிமுக சின்னத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக (புரட்சிதலைவி அம்மா) அணியின் மதுசூதன், அதிமுக(அம்மா) அணியின் தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பிரசாரம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த இரு அணிகள், தனித்தனி பெயரில் போட்டியிடுவதால், அவர்கள் அ.தி.மு.க.வின் கட்சி பெயரையோ சின்னத்தையோ பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இருப்பினும் விதிகளை மீறி ஒரு சில பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் சமூக வலைத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு தினகரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனும் அதிமுக பெயரை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அதிமுக சின்னம் மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியதாக தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை மாலை 4 மணிக்குள் இருவரும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதிமுக மற்றும் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை இரு அணிகளும் பயன்படுத்தக்கூடாது என்றும், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள இரட்டை இலை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.