மீண்டும் தள்ளிப்போகிறதா அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வாக்குப்பதிவு? ஆய்வு செய்ய குழு அமைப்பு
சென்னை: வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் 232 தொகுதிகளுக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், 19ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் பண பட்டுவாடா அதிகமாக இருந்ததால் அந்த தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:
ஆய்வு அவசியம்
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில், 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நடத்த ஏதுவான சூழல் நிலவுகிறதா, அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
ஆய்வு குழு
இதற்காக 4 பேர் கொண்ட ஆய்வுகுழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த குழு சம்மந்தப்பட்ட தொகுதிகளில் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை நாளை மாலை 4 மணிக்குள் தேர்தல் கமிஷனிடம் வழங்கும்.
நடவடிக்கை பரிசீலனை
இந்த அறிக்கையை பரிசீலித்து, இவ்விரு தொகுதிகளிலும் வேறு எந்த மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தள்ளிப்போக வாய்ப்பு?
ஒருவேளை பணப்பட்டுவாடா இன்னமும் நடைபெற்றுக்கொண்டுள்ளதாக, ஆய்வு குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில், அறிவித்தபடி 23ம் தேதி, இவ்விரு தொகுதிகளிலும், தேர்தல் நடைபெறுமா, அல்லது ஒத்திப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குண்டு வீச்சு
அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. பண பட்டுவாடா மட்டுமின்றி, இதுபோன்ற தேர்தல் வன்முறையையும் காரணம் காட்டி அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.